செவிலியர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும், காவல் துறையினரையும் தாக்கியதாக 35 வயதுடைய நபரொருவர் Avignon மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று அந்த மனிதர் தனது கர்ப்பிணி மனைவியுடன் Avignon பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றுள்ளார். காத்திருக்க விரும்பாத அவர் பொறுமையிழந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகவும், சுவர்கள் மற்றும் ஜன்னல்களை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவலர்கள் வந்தபோதும் அமைதி அடையாத அந்த நபர், காவல் துறை அதிகாரி ஒருவரை ரத்தம் வரும் வரை கடித்ததாக கூறப்படுகிறது. கட்டுக்கடங்காமல் நடந்துக்கொண்ட அவரை இறுதியாக மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி மயக்கமடைய வைத்தனர்.
விசாரணையின் போது, தாக்குதலில் ஈடுபட்டவர் தன்னுடைய மனைவி வலியில் இருந்ததாகவும், மது மற்றும் கஞ்சா போதையினால் தனது பொறுமையை இழந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். மனநல சோதனைகளுக்கு பிறகு குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளார்.