Arpajon நகரில் மனைவியை ரொட்டி கத்தியால் தாக்கிய கணவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மனைவியை அவர் தொடர்புகொள்ளவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அந்நபர் ஏற்கனவே அவரின் மனைவி தங்கியிருந்த வீட்டிற்கு செல்ல நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் மனைவி வசிக்கும் வீட்டின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடத்தில் தங்கியிருந்துள்ளார். சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள 60 வயது நபர் வேலைக்கு சென்றுவிட்டு தன்னுடைய மூன்று வயது மகனுடன் வீடு திரும்பிய தன்னுடைய மனைவியின் மீது ரொட்டியை வெட்டும் கத்தியுடன் பாய்ந்து அவரை தாக்கியுள்ளார். உயிருக்கு பயந்து மின் தூக்கிக்குள் சென்று கதவை மூட முயன்றுள்ளார். இருப்பினும் உள்ளே நுழைந்த அந்த நபர் அவரை தாக்கியுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு தலை, இடது கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று வயது சிறுவனின் கண்முன்னே இச்சம்பவம் நடந்துள்ளது.
‘தன்னுடைய பாதுகாப்பிற்காக கத்தி வைத்திருந்தேன்’ என்று குற்றம்சாட்டப்பட்ட நபர் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். ‘உங்கள் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. எப்படி? உங்கள் மனைவி கத்தி மேல் தடுக்கி விழுந்து விட்டாரா?’ ‘மனைவியை சந்திக்க செல்லும்போது நீங்கள் கத்தியுடன் தான் செல்வீர்களா?’ என்றெல்லாம் நீதிபதி அவரை நோக்கி சராமாரியாக கேள்வியெழுப்பினார்.
சிறை தண்டனையுடன் சேதம் விளைவித்ததற்கு 1000 யூரோக்கள் தண்டமும், ஆயுதம் வைத்திருக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.