நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி சிரிஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 1-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் சந்திராயன் 3 ன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. ஆகஸ்டு 17ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டர் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு பயணித்து வந்த ரோவரில் இருந்து லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று, புதன்கிழமை, இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் சந்திராயன்-3ஐ நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டதை தொடர்ந்து காலை முதல் லேண்டரைத் தரையிறக்குவதற்கான வேலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர்.
தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கைகளைத் திட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாதனை குறித்த அறிவிப்பை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக அவர் பெருமிதம் பொங்க குறிப்பிட்டார்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா, ரஷ்யா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவும் நிலவில் கால் பதித்துள்ளது.