ஷேக் ஹசீனா தலைமையிலான ‘அவாமில் லீக்’ (Awami League) கட்சிக்கு அந்நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு அந்நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையில் இயங்கி வரும் இடைக்கால அரசு கூறியதாவது, அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மீது பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை முடியும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும். நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அப்போது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
அப்போது நடந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். எனவே மக்கள் விரோதமாக செயல்பட்ட அவாமி லீக் கட்சியை தடை செய்யக்கோரி, வங்கதேச மாணவர் அமைப்புகள், ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் சாலைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவாமி லீக் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘சட்ட விரோதமாக செயல்படும் அரசின் இந்த உத்தரவும் சட்டவிரோதமானது’ என்று இந்த தடையை ஏற்க மறுத்து பதிவிட்டுள்ளது.
வங்கதேசத்தின் சுதந்திரத்துக்கு முக்கிய பங்காற்றிய அவாமி லீக் கட்சி அந்நாட்டின் மிகப் பழைமையான அரசியல் கட்சியாக விளங்குகிறது. 1984 ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் தலைவராக ஷேக் ஹசீனா உள்ளார்.